GuidePedia


மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வாஸ்வானி என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆபாசப்படங்களை பார்ப்பதும், அதை பகிர்ந்துகொள்வதும் ஜாமீனில் விட முடியாத கடும் குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.         

அந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விஷயத்தில், மத்திய அரசுதான் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.         

இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாதாடினார். அவர் கூறியதாவது:-    

நமது நாடு சர்வாதிகார நாடு அல்ல. மக்களின் தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிட விரும்பவில்லை. கலாசார காவலராக செயல்படவும் விரும்பவில்லை. சிலர் தங்கள் அறையில் தனியாக ஆபாசப்படம் பார்க்க விரும்புகிறார்கள். அதை நாம் தடுக்க முடியுமா?          

நாம் இப்போது ‘டிஜிட்டல் இந்தியா’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். சுதந்திர தின உரையில், தான் என்ன பேச வேண்டும் என்று நாட்டு மக்களிடம் பிரதமர் யோசனை கேட்கும் நிலையில் நாம் இருக்கிறோம். அப்படி இருக்கையில், மக்கள் அதைப் பார்க்கக்கூடாது, இதைப் பார்க்கக்கூடாது என்று நாம் தடை விதிக்க முடியாது. முன்பெல்லாம், பத்திரிகை வடிவில் மட்டுமே ஆபாச படங்கள் வந்தன. அவற்றின் வெளியீட்டை நிறுத்துவதன் மூலம் தடை விதிக்க முடிந்தது. ஆனால், இப்போது செல்போன்களில் ஆபாசப்படங்கள் பார்த்து விடுகிறார்கள். அதை எப்படி தடுப்பது?          

அதே சமயத்தில், குழந்தைகளின் ஆபாசப்படங்களுக்கு கண்டிப்பாக தடை விதிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். வளர்ந்த நாடுகளே குழந்தைகளின் ஆபாசப்படங்களை தடை செய்துள்ளன. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இதர வகையிலான ஆபாசப்படங்களுக்கு தடை விதிப்பது பற்றி பெருமளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதை பாராளுமன்றத்திலோ அல்லது பொது அமைப்புகளிலோதான் நடத்த வேண்டும். கோர்ட்டில் அல்ல.         

இவ்வாறு அட்டார்னி ஜெனரல் வாதாடினார்.          

இந்த பிரச்சினை குறித்து மற்றொரு நாளில் விரிவாக விவாதிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.



 
Top