ஐந்து மாத கைக்குழந்தை அருகிலிருக்க 17 வயதான அக்குழந்தையின் தாயினது சடலமொன்று வீட்டிலிருந்து நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டைக் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திகிலிவெட்டைக் கிராமம் விஷ்ணுகோயில் வீதியைச் சேர்ந்த கந்தையா பவித்திரா (வயது 17) என்ற ஒரு குழந்தைக்குத் தாயான குடும்பப் பெண்ணின் சடலமே வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோயில் திருவிழாவை முன்னிட்டு எற்பாடு செய்யப்பட்ட சிரமதானமொன்றுக்கு காலையில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி வந்து பார்க்கும்போது மனைவி சடலமாகக் கிடந்ததாகவும் ஐந்து மாதக் கைக்குழந்தை அருகே இருந்ததாகவும் பெண்ணின் கணவர் மரண விசாரணையின் போது சாட்சியமளித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.