GuidePedia

(TW) வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவிக்கு மாகாண சபை உ றுப்பினர் ஏ.எல்.எம். தவம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரான சம்மாந்துறை மன்சூர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். இதனையடுத்து அந்த அமைச்சுப் பதவி தற்போது காலியாகவுள்ளது.
குறித்த அமைச்சுப் பதவிக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டுள்ளவரும், அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையான ஒலுவில் பிரகடனத்தின் முக்கிய சூத்திரதாரியாக ஏ.எல்.எம். தவம் செயற்பட்டிருந்தார்.
2005ம் ஆண்டில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் துயரங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலின் போது பீ.பி.சி.யின் நந்தன வீரரத்தின, மற்றும் ஆர்.எப். அஷ்ரப் அலீ குழுவினருடனும் இணைந்து செயற்பட்டிருந்தார்.
அதன் பின் வந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டு அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தவம், பின்னர் அதாவுல்லாவுடன் கருத்து முரண்பாடு கொண்டு முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார்
இந்நிலையில் தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினராக உள்ள அவர், எதிர்வரும் நாட்களில் மாகாண சபையின் சுகாதார அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன



 
Top