நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தேச விடுதலைக் கட்சியின் தலைவர் கலகம தம்மரங்சி தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குகள், தேர்தல் முடிவுகளுக்கு இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது.
இதன் மூலம் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகவே சந்தேகம் எழுகின்றது.
இது குறித்த தகவல்கள் எம்மிடம் உண்டு. வாக்கு கொள்ளை குறித்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும்.
வாக்கு கொள்ளை இடம்பெற்றமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை நிரூபிக்க நாம் உச்ச நீதிமன்றின் உதவியை நாடுவோம்.
நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதனால் விடுமுறை முடியும் வரையில் காத்திருக்கின்றோம்.
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளோம் என தம்மரங்சி தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயா நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் இம்முறை தேர்தல் மிகவும் நீதியானதும் சுயாதீனமானதுமான முறையில் நடைபெற்றதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
