GuidePedia

(க.கிஷாந்தன்)

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து எல்லைத்தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் 5 இந்திய இழுவைப் படகுகளையும். 33 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.

குறித்த இந்திய மீனவர்கள் 33பேரும் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மேற்படி மீனவர்கள் இன்றைய தினம் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம், ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நேற்று முன்தினம் கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் எல்லைதாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி கடற்படைக்கு பணிப்புரை விடுத்திருந்ததனால், உடனடியாக இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது.

இதேவேளை இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்ட, இந்திய மீனவர்கள் ஊடகவியலாளர்களுடன் பேசுகையில், வழமைப் போன்றே தாம் திசைமாறி இலங்கை கடற்பகுதிக்குள் வந்துவிட்டதாக தெரிவித்ததுடன், கைது செய்தபோது இலங்கை கடற்படை தம்மை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.




 
Top