GuidePedia

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்டத்துறை தமிழ் மொழி மூல பாடசாலைகளை அடிப்படையகக் கொண்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தவிர்க்கமுடியாத காரணத்தால் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு (29.04.2015) அன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஏற்கனவே குறிப்பிட்டது போல (30.04.2015) அன்று வியாழக்கிழமை வழங்கப்படவிருந்த குறித்த நியமனமானது எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.04.2015 அன்று தபாலிடப்படவுள்ளது. நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாகவே இந்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 29.04.2015 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பு இந்த நியமனங்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்குவதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் அவர்களுக்கான கடிதங்கள் கிடைத்தவுடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு சமூகமளித்து தமது நியமனக்கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.



 
Top