ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் கடந்த 7-ந் தேதி செம்மர கட்டை வெட்டி கடத்தியதாக 20 தமிழக கூலித்தொழிலாளர்கள் ஆந்திர மாநில போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களையும், மர்மநபர்கள் ஆந்திர மாநில அரசு பஸ்களையும் தாக்கினார்கள்.
இதனால் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஆந்திர மாநில அரசு பஸ்களும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் ஆந்திர அரசு பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
11 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் இரவு முதல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயங்க தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக, திருப்பதி மற்றும் நெல்லூர் இடையே குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
