GuidePedia

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்டு தனியே வாளேந்திய சிங்கம் காணப்படும் கொடிகளை கைகளில் ஏந்தி இருந்தார்கள். இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மை இன மக்களை குறிக்கும் மஞ்சள்,  பச்சை ஆகிய நிறங்கள் அல்லாது தனியே பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் குறிக்கும் கருஞ் சிவப்பு நிற கலரில் நான்கு மூலைகளுக்கும் அரச இலைகள் மற்றும் வாளேந்திய சிங்கம் கொண்ட கொடிகளையே ஏந்தி இருந்தார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததும்  இலங்கைக்கு நாட்டுக்கு என தேசிய கொடி  தேவை ஏற்பட்டது. அதுவரை பிரித்தானிய ஒன்றியக் கொடியே இலங்கை கொடியாக இருந்து வந்தது. இலங்கை சுதந்திரமடைந்த வேளை  பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கனின் சிவப்பு நிறப் பிண்ணணியில் மஞ்சள்நிற போர் வாளேந்திய சிங்கக்கொடியானது சுதந்திர இலங்கையை குறிக்கும் சிறந்த கொடியாக அமையும் என தேர்வு செய்தார். எனினும் அக் கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ் முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சில நாட்களின் பின் தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஜே.எல். கொத்தலாவல, டி.பி. ஜாயா, எல்.ஏ. ராஜபக்ச, எஸ். நடேசன், ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடாளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள், பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டது. இதில் பச்சை முஸ்லிம் இனத்தையும், மஞ்சள் தமிழரையும் குறிக்கும்.

அத்துடன் பௌத்த மதத்தைக் குறிக்கும் வகையில் நான்கு அரசிலைகள் கொடியின் நான்கு முலைகளிலும் இணைக்கப்பட்டது. அத்துடன் சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. இக்கொடியே தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது.



 
Top