(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மன்மத சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு விளையாட்டு கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய 19வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா 18-04-2015 நேற்று முன்தினம் சனிக்கிழமை காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
காரைதீவு விளையாட்டு கழகத்தின் தலைவரும்,ஆசிரியருமான வீ.அருள்குமரன் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெத்தினம் கலந்து கொண்டார்.
மேற்படி விளையாட்டு விழாவில் காரைதீவு விளையாட்டு கழகத்தின் உப தலைவர் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரன்,கழகத்தின் செயலாளரும்,காரைதீவு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரியுமான வீ.விஜயகாந்தன்,பிரதேச செயலாளர்கள், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உட்பட கல்வியலாளர்கள்,புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள்,தொழிலதிபர்கள், காரைதீவு விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு சிறுவர்,சிறுமிகளுக்கு ,இளைஞர்,யுவதிகளுக்கு,வயோதிபர் களுக்கு என பலதரப்பட்ட வயதினருக்கும் வினோதமான,சுவாரசியமான விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
இவ் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் , பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதோடு கல்விப் பொதுத் தராதர சாராரண தரப்பரீட்சையில் 9 ஏ சித்திபெற்ற மாணவர்களும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கலைத் துறையில் 3ஏ சித்தி பெற்ற மாணவியும்,மருத்துத்துறை மற்றும் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு அண்மையில் இடம்பெற்ற கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று காரைதீவு மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்கள் இங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.




