மக்கா மஸ்ஜிதுல் ஹரமில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய கிரேன் விபத்தில் சிக்கி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் வெளிநாட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அந்நாட்டு மன்னர் சல்மானின் ஆலோசகரும், புனித மக்கா நகர அமீருமான காலித் அல் பைசல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விபத்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற தடையாக அமையாது எனவும், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான விஷேட வாகனங்களில் ஹஜ் கடமையை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அவர், மன்னர் சல்மான், முடிக்குரிய இளவரசர் நாய்ப் ஆகியோரின் இரங்கல் செய்தியை தெரிவித்ததோடு, அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்ததாகவும் அந்நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.