இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்க டொலர்களை எடுத்துச் செல்ல முயன்ற மாலைதீவு பிரஜையொருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை இலங்கையிலிருந்து மாலைதீவுக்குப் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணிக்கவிருந்த இவரிடம் சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்படவிருந்த அதன் பெறுமதி மூன்றரை மில்லியன் ரூபாவாகும்.
இதனையடுத்து 26 வயதான குறித்த மாலைதீவுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து அமெரிக்க டொலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபருடன் இணைந்து இந்த சட்டவிரோத பணக் கடத்தல் செயற்பாட்டில் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான விசாரணையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.