GuidePedia

நிதியமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ. தே. க. வேட்பாளருமான ரவி கருணாநாயக்கவை இலக்கு வைத்து கொழும்பு புளூமெண்டால் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மு. ப. 11.30 அளவில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு இரு சொகுசு கார்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு காரே அடையாளம் காணப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகளால் பயன்படுத்தப்பட்தாக நம்பப்படும் இந்தக் கார் தலங்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையதென இரகசியப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதோடு 13 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு புளுமெண்டால் தொடர் மாடிக் குடியிருப்புக்கருகிலிருந்து ரி 56 ரக தோட்டாக்கள் மற்றும் ரிவோல்வர் ஒன்றுடன் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த காரை அடிப்படையாகக் கொண்டு அதன் உரிமையாளர் தலங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவரென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரகசிய பொலிஸார் குறித்த நபரின் வீட்டைத் தேடிச் சென்றபோது அங்கே அவர் இருக்கவில்லை. அவர் தனது குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த நபரை, உடனடியாக இரகசியப் பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக வருகை தருமாறு தகவல் வழங்கப்பட்டுள்ளதனால் அவர் இன்று திங்கட்கிழமை இரகசிய பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
இந்த வாகனத்தின் உரிமையாளர் தனது வாகனத்தை குறித்த நிறுவனமொன்றுக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார். அங்கிருந்தே சந்தேக நபர்கள் மேற்படி வாகனத்தை வாடகைக்கு பெற்றிருக்க வேண்டுமெனவும் ஆரம்ப விசாரணைகளினடிப்படையில் தெரிய வருகிறது.
இருந்தபோதும் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு மிகவும் சூட்சுமமான முறையில் திட்டமிடப்பட்டு யாரோ ஒரு தரப்பினரால் ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்பவர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று துப்பாக்கி தாரிகள் பயணம் செய்த கார் கறுப்பு நிறமானதென சாட்சியங்கள் கூறுகின்றன. எனினும் தோட்டாக்கள் மற்றும் ரிவோல்வருடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் ஹைபிரிட் ரகத்தைச் சார்ந்த கடும் பச்சை நிறமானதென்றும் இரகசியப் பொலிஸார் கூறினர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளாக பலர் உள்ளனர். இவர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படும் அதேநேரம், சந்தேக நபர்கள் தொடர்பிலான உருவப்படங்களை வரைவதற்கும் இரகசிய பொலிசார் முயற்சிக்கின்றனர்.
இருந்த போதும், வாகன உரிமையாளரின் வாக்குமூலத்திலிருந்து பல பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்கக்கோனின் பணிப்புரைக்கமைய இது தொடர்பிலான விசாரணைகளை துரித கதியில் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை இரகசியப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



 
Top