GuidePedia

இன்று (08) மதியம் 3.30 மணியளவில் புதுக்கடை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல் நடவடிக்கைகளையே காட்டுக்கின்றது. 

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டம் சார்பில் களமிறங்குவதற்கு அவர் போராடி வந்தார். கடந்த மாகாண சபை தேர்தலில் என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வெற்றிபெற்ற பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் என்னுடன் இணைந்தே அவர் அரசியல் செய்தார். எனினும் பாராளுமன்ற தேர்தலில் தான் மாத்திரம் போட்டியிட வேண்டும் என்கிற அவாவில் அவர் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்திலிருந்து பிரிந்து சென்று புதுக்கடையில் அலுவலகம் திறந்தார். அத்துடன் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பைரூஸ் ஹாஜியார் தான் கட்டாயம் போட்டியிடப்போவதாகவும் முஜிபுர் ரஹ்மானாகிய எனக்கு வாய்ப்பு கிடைக்க மாட்டாது எனவும் பகிரங்கமாக தெரிவித்துவந்தார்.
 
எனினும் வேட்பு மனுவில் பைரூஸ் ஹாஜியாருக்கு இடம் வழங்காது, பராளுமன்றம் செல்வதற்கு பொறுத்தமானவர் நான் என்பதை அறித்த கட்சித்தலைமை முஸ்லிம்கள் சார்பிலும் மத்திய கொழும்பு சார்பிலும் தேர்தலில் என்னை களமிறக்கியது. 

வேட்புமனுவில் வாய்ப்பு கிடைக்காதநிலையில் அவர் என்னை இந்த தேர்தலில் தேல்வியடையச் செய்யவேண்டும் என பகிரங்கமாக தெரிவித்ததோடு, அதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார். எனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பல பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

மத்திய கொழும்பின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் கொழும்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என மக்களும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாடுமுழுவதிலுமுள்ள புத்தி ஜீவிகளும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பைரூஸ் ஹாஜியார் மூன்று சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து விளம்பர பதாதையொன்றை தனது அலுவகத்தில் காட்சிப்படுத்தினார். இதனால் கோபமடைந்த புதுக்கடை வாழ் முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதன்காரணமாக அவர் குறித்த பதாகையை நீக்கிவிட்டு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பதாகையை காட்சிப்படுத்தினார். எனினும் கொழும்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், பைரூஸ் ஹஜியார் மூன்று சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக பிரச்சாரம் செய்து வருகின்றார். இதனால் கோபமடைந்த புதுக்கடை மக்கள் என்னை அங்கு வருமாறு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தவன்னம் இருக்கின்றனர். 

மக்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்று தேர்தல் பிரச்சாரங்களை நான் முன்னெடுத்தேன். இன்று (08) மதியம் 3 மணியளவில் அப்துல் ஹமீத் வீதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுப்பட்டேன். இதன்போது புதுக்கடையிலுள்ள பைரூஸ் ஹாஜியாரின் அலுவலகத்தை கடந்து செல்லவேண்டி ஏற்பட்டது. எந்த பிரச்சினையுமின்றி அவ்விடத்தை விட்டு கடந்து சென்றேன். எனினும் நான் அவ்விடத்தை விட்டு சென்ற பின்னர். புதுக்கடையிலுள்ள எனது ஆதரவாளர்கள் பலரும் வீதியில் குழுமிக்கொண்டனர். அவர்களுடன் பைரூஸ் ஹாஜியாரும் அவரது ஆதரவாளர்களும் முரண்பட்டுக்கொண்டனர். 

எனினும் அவ்விடத்தை விட்டு நாம் அமைதியாக கடந்து சென்றுவிட்டோம். பின்னர் மீண்டும் அவ்வழியாக வரவேண்டிய நிலை ஏற்பட்டபோது எம்மோடு வந்த நான்கு பெண்கள் மீது பைரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து அந்த பெண்கள் வாழைத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இந்நிலையில் பைரூஸ் ஹாஜியாரின் அலுவலகம் தாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியிருக்கின்றார். அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு தமது ஆதரவாளர்கள் அவரது அலுவகத்திற்குள் செல்லவும் இல்லை. இது வெறும் பொய்ப் பிரச்சாரமாகும். 

அத்துடன் என்னுடன் வந்த இளைஞர்கள் குடிபோதையில் இருந்ததாக குறிப்பிடுகின்றார். அது அபாண்டமாகும். ஏனெனில் பெரும்பாலும் முஸ்லிம் இளைஞர்களும் தாடி தொப்பியுடன் இருந்த மார்க்கப்பற்றுள்ளவர்களே என்னை பின்தொடர்ந்தனர். அவரின்குற்றச்சாட்டானது முஸ்லிம்களை அவமதிப்பதாகவே இருக்கின்றது. 

அது மட்டுமன்றி புதுக்கடையிலுள்ள முஸ்லிம் இளைஞர்களையும் என்னுடன் வந்த மற்றும் சில இளைஞர்களையும் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள் என பிராந்திய இணையத்தளமொன்றுக்கு பைரூஸ் ஹாஜியார் ஒலிப்பதிவு ஒன்றை வழங்கியுள்ளார். இதில் பல முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்றன. கடந்த மாகாண சபை தேர்தலின்போது அவர் என்னுடனேயே தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அப்படியாயின் அவர் பாதாள உலக் குழுவுடன் இணைந்தா தேர்தல் நடத்துகின்றார்?. அத்துடன் புதுக்கடை தனது கோட்டை என தெரிவித்து வருவார். அப்படியாயின் புதுக்கடையில் உள்ள இளைஞர்களும் தாடி தொப்பி அணிந்தவர்களும் பாதாள உலகக் குழுவினரா?. அவர் தனக்கு தேர்லில் வாய்ப்பு கிடைக்க வில்லை என்பதற்காக என்மீதும் புதுக்கடை மக்கள் மீதும் அபாண்டமாக பலி சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

அவர் என்னை தேர்தலில் தோல்வியடையச் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் செயற்படுவதானது கொழும்பு முஸ்லிம்களையும் மத்திய கொழும்பு மக்களையும் ஏமாற்றும் செயல் மட்டுமல்லமல் இம்மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இவரின் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். புதுக்கடையில் இடம்பெற்ற சம்பவமான அவரின் பொறாமையின் வெளிப்பாடாகும். அத்துடன் அவரின் கீழ்தரமான அரசியல் செயற்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.



 
Top