GuidePedia

மஹிந்த இனவாதத்தை பரப்பி மீண்டும் இந்நாட்டில் ஆட்சி பீடம் ஏற முனைகிறார். இதற்கு யாரும் துணை போகாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும் என மாவட்ட ஐ.தே.க வேட்பாளரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க கேட்டுக் கொண்டார். 

மினுவாங்கொடை கல்லொழுவை முஸ்லிம் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பெற்ற பெரு வெற்றியை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஜனவரியில் தோற்றுப் போன மஹிந்த மீண்டும் நிழல் போல தொடர்ந்து ஆட்சி பீடம் ஏற முனைகிறார். இது வெட்கப்பட வேண்டிய விடயம் மாத்திரமல்ல, அவர் சகல மக்களையும் அதாலபாதாளத்தில் தள்ளுவதற்கும் முற்படுகிறார். இதை ஒவ்வொருவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். 

தற்போது மிகச்சிறந்த நல்லாட்சியொன்று நடைபெறுகிறது. மலர்ந்துள்ள நல்லாட்சியை இரண்டு செயற்திறன் மிக்க தலைவர்கள் வழிநடத்திச் செல்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிகரமசிங்க ஆகியோர் தூய்மையான சாதுர்யமான நல்ல உள்ளம் படைத்த இருவர். இதனால் தான் நல்லாட்சியை நான் தேர்ந்தெடுத்தேன். எனவே பொதுத்தேர்தலில் புத்திகூர்மையுடன் செயற்பட்டு உங்கள் பொன்னான வாக்குகளை ஐ.தே.க.வுக்கு வழங்கி எதிர்வரும் சந்ததியினரை மஹிந்தவின்  ஆபத்திலிருந்து பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.  



 
Top