எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் 10 முதல் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்கும் நோக்கத்திலேயே நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியல் தேவைக்காக இந்த விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டதாகவும் அடக்குமுறை மாத்திரமே அதில் முழுமையாக மேற்கொள்ளப்படுவதாகவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்படுத்த வேண்டுமாயின், நாடு பெருந் தொகை பணத்தை இழக்க காரணமாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனரையே முதலில் ஆஜர்படுத்த வேண்டும். எனினும் அவர் எந்த பிரச்சினையுமில்லாமல் இருந்து வருகிறார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான இணையத்தளங்கள் அடுத்தது யார் கைது செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன எனவும் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
அதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயம் பற்றி கருத்து வெளியிட்டுள்ள வீரவன்ஸ, 2001 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்தி செய்து கொள்ள முடியாததை அமெரிக்கா மீண்டும் செய்து கொள்ள முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.
இலங்கை மக்கள் வெசாக் பண்டிகையை கொண்டாடிய நாட்களில் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்ததால், மக்களுக்கு அது பற்றி சிந்தனை இருக்கவில்லை என்பதால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாமல் போனது.
அதேபோல் பாடசாலை அதிபரும் மாணவர்களும் நலமாக இருக்கின்றனரா என்று பார்ப்பதற்காகவே ஜோன் கெரி இலங்கை வந்தார் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.