GuidePedia

(க.கிஷாந்தன்)
நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை திறக்குமாறு கோரி காசல்ரீ கார்ப்பெக்ஸ் பகுதி தோட்ட தொழிலாளிகளும் பெற்றோர்களும் கார்பெக்ஸ் பாடசாலைக்கு முன்பு 26.05.2015 அன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அட்டன் கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களின் திறப்பு விழாக்களை மறு அறிவித்தல் வரை பிற்போடுமாறு மத்திய மாகாண முதலமைச்சரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
மலையக பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம் அம்பகமுவ மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் ஒன்பது ஆய்வு கூடங்கள் நிர்மாணிகப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனினால் இதனை மாணவர்களிடம் கையளிப்பதற்கான திறப்பு விழா 26.05.2015 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும் அது பிற்போடப்பட்டுள்ளது.
எனினும் திறப்பு விழாவை நிறுத்துமாறு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தனக்கு அறிவித்ததாகவும் இதனால் திறக்கப்படவிருந்த ஆய்வு கூடங்கள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் எமக்கு தெரிவித்தார்.
அத்தோடு நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களின் பெயர் பலகையில் சில பெயர்கள் மாற்றம் செய்யவிருப்பதனால் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
25.05.2015 அன்றைய தினம் கொத்மலை பிரதேசத்தில் மூன்று ஆய்வு கூடங்கள் திறந்து வைகப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.
இதேவேளை 26.05.2015 அன்று காசல்ரீ கார்பெக்ஸ், நோர்வூட், மஸ்கெலியா கவரவில போன்ற பகுதிகளில் கட்டிடங்கள் திறக்கப்படவிருந்திருந்தாலும் 26.05.2015 அன்று அது திறக்கப்படவில்லை. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் அதிக பணம் செலவு செய்து ஏற்பாடு செய்திருந்தாலும் திறப்பு விழா இடம்பெறாமை வேதனைக்குரிய விடயம் என மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்தனர்.
எனினும் இச்செயல்பாட்டை கண்டித்து 26.05.2015 அன்று காசல்ரீ கார்ப்பெக்ஸ் பகுதி பெற்றோர்களும், தோட்ட தொழிலாளிகளும் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறக்குமாறு கோரி காசல்ரீ சந்தியிலிருந்து பாடசாலை வரை பேரணியாக சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெற்றோர்களும், தோட்ட தொழிலாளிகளும் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பிறகு நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.







 
Top