நாமல் ராஜபக்ஸ எம். பி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பலம் சேர்க்கின்ற நிகழ்ச்சிகளில் நாமல் ராஜபக்ஸ எம்.பி பங்கேற்காமல் இருக்கின்றார் என்பதே இம்மகிழ்ச்சிக்கு காரணம் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தும் உள்ளார்.
சுதந்திர கட்சி உறுப்பினர்களில் ஒரு தொகையினர் மஹிந்தவுக்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர் என்று சுட்டிக் காட்டி உள்ளார்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஸ தகப்பனான போதிலும்கூட மகன் நாமல் ராஜபக்ஸ இவ்வாறான நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது, சுதந்திர கட்சியின் கொள்கைகளை நாமல் பின்பற்றி நடக்கின்றார், ஆனால் ஏனையோர் சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்கள், அடுத்த அரசாங்கத்தை சுதந்திர கட்சி அமைப்பதை தடுக்க பார்க்கின்றனர் என்று கூறினார்.
வெளியில் இருந்து நுழைந்தவர்களே கட்சியை பிளவுபடுத்த பார்க்கின்றார்கள், சுதந்திர கட்சியின் உண்மையான விசுவாசிகளும் இருக்கின்றனர், இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றனர் என்று சொன்னார்.