(க.கிஷாந்தன்)
அரசாங்கத்தினூடாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு 2000 ரூபா பெறுமதியான போசணை பொருட்கள் வழங்கும் இரண்டாவது முறையான திட்டத்தில் 06.05.2015 அன்று பொகவந்தலாவ கொட்டியாகலை, கெகர்ஸ்வோல்ட், கெம்பியன் ஆகிய பகுதிக்கு வழங்கவிருந்த போசணை பொதியில் பாவிக்க முடியாத நிலையில் இருந்த நெத்திலி மற்றும் பச்சை அரிசி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வழங்கவிருந்த பொதிகளை சுகாதார பரிசோதகர்கள் சென்று பரிசோதனை செய்யும் போது இவ்வாறு அரிசியும், நெத்திலியும் பாவிக்க முடியாத பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்த போசணை பொருட்களை வழங்கிய மஸ்கெலியா பகுதியில் உள்ள ஒரு தனியார் தொகை கடைக்கு சென்று பரிசோதனை செய்யும் போது முதலில் பாவிக்க கூடிய நிலையில் உள்ள போசணை பொருட்களை சுகாதார பரிசோதகருக்கு காண்பித்து விட்டு போசணை பொருட்களை பொதியிடும் போது பழுதடைந்த அரிசியையும், நெத்திலியையும் குறித்த வர்த்தகர் பொதியிட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் எச்.எம்.பீ. ஹெரத் தெரிவித்தார்.
எனினும் பச்சை அரிசியும், நெத்திலியும் இல்லாமல் முட்டை, செமன், உழுந்து, பயறு, நிலக்கடலை, கடலை, பருப்பு ஆகியவை அடங்கிய பொதியை 06.05.2015 அன்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கியுள்ளதாகவும் வழங்க முடியாமல் போன பச்சை அரிசியும், நெத்திலியையும் எதிர்வரும் தினங்களில் வழங்கவுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் எச்.எம்.பீ. ஹெரத் மேலும் தெரிவித்தார்.
பாவிக்க முடியாத நிலையில் இருந்த அரிசியையும், நெத்திலியையும் தீயிட்டு அழிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இந்த பொருட்களை வழங்கிய குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.






