GuidePedia


கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது.

'ஜேர்னோஸ் மீட்டப் - 2015' எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள ஆகிய மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள கலந்துகொண்ட இந்த செயலமர்வு விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

"இன நல்லிணக்கத்திற்கான ஊடகவியலாளர் சமூக வலையமைப்பு" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முழுநாள் செயலமர்வில் "உணர்வை மதித்து ஊடக அறிக்கையிடல்" எனும் தலைப்பில் கலாநிதி ரங்கா கலன்சூரியவும், தொலைக்காட்சி படப்பிடிப்பு தொடர்பில் தொலைக்காட்சி படப்பிடிப்பு தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் பெர்ட்ரம் நிஹால் "ஒற்றுமை எம்மை நிலைத்திருக்கச் செய்யும் பிரிவினை எம்மை வீழ்த்தும்" எனும் தொனிப்பொருளில் வளவாளர் இஸ்மாயில் ஏ அஸீஸும், "நவீன ஊடகங்களை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்துவது" தொடர்பில் விடியல் இணையத்தளத்தின் இணை ஸ்தாபகரும் சிரேஷ்ட மென்பொருள் பொறியியலாளருமான தௌபீக் எம். கான் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இச்செயலமர்வின் இடையிடையே பங்கபற்றுனர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வினாக்கள் தொடுக்கப்பட்டு அதற்காக பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 
Top