GuidePedia

கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்' என்ற கூட்டத் தொடரை மீண்டும் அமுல்படுத்துமாறு கிழக்கு மாகாண சபையை கோரும் தனிநபர் பிரேரனையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிப்பு.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

கிழக்கு மாகாண சபையின் சகல தரப்பினரது பங்கு பற்றுதலுடன் சென்ற கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் மாவட்டங்கள் தோறும், 'கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்' என்ற பெயரிலான கூட்டங்களை நடாத்தியதால் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மாவட்ட ரீதியில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காணக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது.

புதிய முதலமைச்சர் பதவியேற்றதன் பின் இதுவரையும் இக் கூட்டங்கள் நடாத்தப்படாமல் இருப்பதனால் மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாவட்ட மட்டங்களில் நடைபெறும் அபிவிருத்தி தொடர்பான விபரங்களை அறிய முடியாத நிலை தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண சபை அமர்வுகளில் நமது மாகாண சபை உறுப்பினர்களே தெரிவித்துள்ளனர். 

எனவே, 'கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்' என்ற கூட்டத் தொடரை மீண்டும் திருமலை, மட்டுநகர், அம்பாரை மாவட்டங்களில் ஒரு வருடத்திற்கு ஒரு தடவையாவது நடாத்துமாறும் 2015ம் ஆண்டிற்கான கூட்டத்தினை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடாத்துமாறு கோரியே இப்பிரேரனையை எதிர்வரும் 20.10.2015ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

எழுத்து -ஊடகப்பிரிவு



 
Top