GuidePedia

(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

முஸ்லிம் மக்களுக்கு தேவையானது முஸ்லிம் கரையோர மாவட்டமா..??முதலமைச்சர் பதவியா..?? என்ற வினா இன்றைய முஸ்லிம் அரசியல் அரங்கில் ஒரு மிக முக்கிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. இது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

கடந்த கிழக்கு மாகாண சபையில் தனது பேரம் பேசல் சக்தியை தக்க வைத்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை அரசிடம் ஒப்படைத்தது.அதன் போது தாங்கள் பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்துள்ளதாகவும் அதற்கு அரசு இணங்கியதற்கு அமைவாகவே தாங்கள் அரசுடன் இணைந்துள்ளதாகவும்  மு.கா அந் நேரத்தில் கருத்து தெரிவித்தமை யாவரும் அறிந்ததே.

இக் கோரிக்கையில் அரை ஆட்சிக் கால முதலமைச்சர் பதவியை மு.கா கோரி இருப்பதாக மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்,மு.கா செயலாளர் நாயகம் ஹசன் அலி,மு.கா பிரதித் தலைவர் ஹாபீஸ் நசீர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கூறி இருந்தனர்.அதிலும் குறிப்பாக மேல் மாகாண தேர்தல் காலப் பகுதியில் இக் கதை அதிகம் எழுந்திருந்தது.குறிப்பிட்ட காலப் பகுதியினுள் அரசு ஒப்படைக்காவிட்டால் அரசுடனான உறவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என மு.கா இனது செயலாளர் நாயகம் ஹசன் அலி குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர்  கோரிக்கை போன்றே வைக்கப்பட்ட கோரிக்கையில் இன்னுமொரு விடயம் தான் முஸ்லிம் கரையோர மாவட்டம்.இது பற்றி அண்மையில் கருத்துத் தெரிவித்த மு.கா இனது செயலாளர் நாயகம் ஹசன் அலி "அந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் விடயம் மட்டுமல்ல, பல விடயங்களுள்ளன. அதில் கரையோர மாவட்டக் கோரிக்கையுள்ளது.அதை உடனடியாகத் தரமுடியாவிட்டால், உடனடியாக மேலதிக மாவட்டச் செயலாளர் பணிமனை ஒன்று திறக்கப்படவேண்டுமென்றும் கோரியுள்ளோம். ஏற்றுக்கொண்டார்கள்."எனக் குறிப்பிட்டு இருந்தார்.

கோரிக்கையில் இவ் இரண்டும் தெளிவாக உள்ள போது முஸ்லிம் மக்களுக்கு தேவையானது முஸ்லிம் கரையோர மாவட்டமா..??முதலமைச்சர் பதவியா..?? என்ற வினா எழ வேண்டிய அவசியம் இல்லை.மு.கா கோரிக்கைக்கு இணங்க அரசிடமிருந்து இரண்டையும் மு.கா முயற்சிக்க வேண்டும்.
கேட்டது எதனையும் அரசு தரா விட்டால் எதற்கு ஒப்பந்தம்..?? அரசுடனான உறவை ஏன் தொடர வேண்டும்..??
முஸ்லிம் மக்களுக்கு தேவையானது முஸ்லிம் கரையோர மாவட்டமா..??முதலமைச்சர் பதவியா..?? என்ற வினாவை  எழுப்பினால் முஸ்லிம் மக்களினது ஏகோபித்த முடிவாக கரையோர மாவட்டம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே,மக்கள் அனைவரும் கரையோர மாவட்டம் பக்கம் கை காட்டுவர்.இன்னும் சில மாதங்களில் முதலமைச்சர் பதவியை ஒப்படைக்கும் காலம் நெருங்குவதால்.அப் பதவி அரசாங்கத்தினால் வழங்கப் படாது போகின்ற போது எங்களுக்குத் தேவையானது வெறும் முதலமைச்சர் என்ற பதவியல்ல.எமது உரிமைகளை தக்க வைப்பதற்கான முஸ்லிம் கரையோர மாவட்டமே எனக் கூறி மக்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும்.
மு.கா உறுப்பினர்கள் இது பற்றி எமக்குத் தேவையானது கரையோர மாவட்டமே எனக் கூறி வருவது முதலமைச்சர் பதவி வழங்கப் படாது போகின்ற போது அதனை எதிர் கொள்ளும் உத்தியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
சரி,தற்போதும் ஒரு முஸ்லிமே முதலமைச்சராக இருக்கிறார் என்பதினால் முதலமைச்சர் விடயத்தில் அதிகம் கரிசனை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் மு.கா எப்போது முஸ்லிம் கரையோர மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்கும்??முதலமைச்சர் பதவி இற்கு கால எல்லை உள்ளது ஆனால் கரையோர மாவட்டத்திற்கோ கால எல்லை இல்லை இன்று நாளை என்று மக்களை ஏமாற்றி விடலாம்.எனவே,மு.கா எக் கால எல்லையினுள் கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொடுக்கும் என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

எது?எவ்வாறு?இருப்பினும் மு.கா ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரித்தால் தான் இவ் விரண்டையும் பற்றி சிந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.முதலமைச்சர் பதவியின் கால எல்லை பெப்ரவரி அளவில் இருகின்றது.ஆனால்,ஜனாதிபதித் தேர்தலோ ஜனவரி மாத முற் பகுதியிலேயே நடை பெற உள்ளதாக அறிய முடிகிறது.கரையோர மாவட்டத்தையும் வழங்குகின்ற நோக்கம் இருந்தாலும் அதனை எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் முன்பு ஒரு போதும் வழங்கி விடாத அவ்வாறு வழங்கினால் பேரின மக்களிடத்தில் இனத் துவேச கருத்துக்களை பரப்பி ஜனாதிபதியை ஆட்சி பீடம் விட்டு இறக்க வழி சமைத்து விடும்.

எனவே,எல்லாம் தற்போதைய ஜனாதிபதியை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தால் தான்  கிடைக்கப் போகிறது.மு.கா இற்கு ஐ.தே.க இணையும் எண்ணம் இருந்தால் இக் கோரிக்கைகளை ஐ.தே.க இடம் முன் வைக்க வேண்டும்.முன் வைத்தாலும் கிடைக்குமா..??
இனவாத கட்சியான ஹெல உறுமய உறுமய ஐ.தே.க உடன் இணையும் சாடைகளை காட்டி வருகிறது.இவ்வாறானான கோரிக்கைகளுக்கு ஐ.தே.க இணங்கியுள்ளது என அறிந்தால் நிச்சயம் ஐ.தே.க யை ஒரு போதும் ஆதரிக்காது.


என்ன நடக்கப் போகிறது..?? என்பதை காலம் கனியும் வரை காத்து நிற்போம்.



 
Top