GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் மனநிலையை புரிந்து கொண்டு தீர்க்கதர்சனமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என முன்னால் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்  

அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இலங்கை முஸ்லிம்களின் உண்மையான மனநிலையை புரிந்து கொண்டு தீர்க்கதர்சனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இந்த ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பல்வேறுபட்ட மதää கலாச்சார, வர்த்தக, மற்றும் உரிமைகள் போன்ற விடயங்களில் பாரிய அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிர்களையும் பல கோடி ரூபா பெறுமதியான உடமைகளையும் இழந்து அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில் வாழ்ந்து வருகின்றன.

ஒரு இறுக்கமான கால கட்டத்தில் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீடம் மிகவும் நிதானமாக சாதக பாதகங்களை விரிவாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த ஆட்சியின் பங்காளிக்கட்சியாகவும் பொறுப்புவாய்ந்த நீதி மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறையையும் அநீதியையும் தடுத்து நிறுத்த முடியாமல் போனது இந்த ஜனாதிபதி அவர்களின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சிக் காலத்தில் தான் என்பதை கட்சித்தலைமை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

அது மாத்திரமில்லாது இந்த நாட்டில் வசிக்கும் ஒரு சிறுபானன்மைச் சமூகமான முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்;பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள்  அடக்கு முறைகள் மற்றும் அநீதிகளை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை தான் என்ன என்ற வினாவுக்கும் விடை கண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். 

  
கட்சியின் தீர்மானம் எதுவும் இல்லாமல் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் மிகப்பொறுப்பு வாய்ந்த ஓரு சிலர் தங்களது சுயநலன்களுக்காக பொறுப்பற்ற வகையில் பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தும் அறிக்கைகளை விட்டு கட்சியையும் முஸ்லிம்களையும் காட்டிக் கொடுப்பதை உடன் நிறுத்த வேண்டும். 

கட்சியின் தீர்மானம் இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அறிக்கைகளை விட்டு ஆட்சியாளர்களின் ஆசிர்வாதங்களை பெறுகின்றவர்கள் முஸ்லிம் சமூகதின் உண்மையான மனநிலையை புரிந்து கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
தங்களது அமைச்சுப் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்கு முஸ்லிம்களை எவரும் அடகு வைக்கக் கூடாது.
  
கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரிய அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது வாய்மூடி மௌனியாக இருந்தவர்கள் இன்று முஸ்லிம்களின் வாக்குகளை ஆட்சியாளர்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதில் மிகவும் மும்முரமாக  போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை விடுவதையும் வீராம்பு பேசுவதையும் உடன் நிறுத்த வேண்டும். இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பேரம்பேசும் சக்தியை இழக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
   
முஸ்லிம்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அதனால் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கப்போகும் நன்மை தான் என்ன என்பதை முதலில் கட்சியின் தலைமை உரிய முறையில் கட்சியின் உள்ளுர் அரசியல் தலைமைகளுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கின்ற முடிவானது மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை ஏற்படுத்தி விடக் கூடாது மிகவும் நிதானமாக தீர்க்கதர்சனமான முடிவினை எடுக்கத் தவறினால் முஸ்லிம் காங்கிரஸ் எதிர் காலத்தில் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஓரம்கட்டப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போகும் என்பதை கட்சித் தலைமை நன்கு புரிந்து கொண்டு தனது தீர்மானத்தினை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



 
Top